சாந்தி வீட்டுக்கார் - 3

சாந்தி வீட்டுக்கார் - 3
===================

வாசல் தெளிக்க போன சாந்தியோட அம்மாவுக்கு பெரியப்பாவோட கோலத்த பார்த்ததும் அதிர்ச்சியாயிடுச்சி.
அத மறைச்சிகிட்டு... வாங்க...மொதல்ல உள்ள வாங்க னு கூப்பிடவும் வந்த கும்பல் முனுமுனுத்துகிட்டே வீட்டுக்குள்ள போய்டுச்சி.
வந்தவங்களோட முகத்துல விவகாரம் பண்ண வந்து இருக்கோம்னு தெளிவா எழுதி இருந்தது. சாந்தியோட அம்மா படிக்க தெரிஞ்சவங்க...அத படிச்சிட்டாங்க!
கும்பல்ல ஒன்னு பேச ஆரம்பிக்கிறப்போவே அம்மா சொல்லிட்டாங்க..நாங்களும் எங்க வீட்டு பெரியவங்க கிட்ட கேட்டோம்...மாப்ள வீட்டு பழக்கத்துல செய்யிறது தான் சரின்னு சொல்லிட்டாங்க. அதனால உங்க விருப்பம் எதுவோ அப்படியே செய்ங்க..
இத கேட்டதும் பெரியப்பாவுக்கு மனசுக்குள்ள மத்தாப்பு...முகத்துல எந்த மாற்றமும் தெரியல...மீசை மறைக்கிது.

இங்க நடக்குறது எதுவுமே தெரியாம நம்ம ஆளு உள்ள தூங்கிகிட்டு இருக்கான். அது பத்தாதுன்னு கனவு வேற. சாந்திய ஒரு தலையா காதலிக்க ஆரம்பிச்ச காலத்த எட்ட நின்னு பார்த்துகிட்டு இருக்கான்.
எவ்வளவு மோசமான ஆணும் வாழ்க்கைல ரெண்டு சமயங்கள்ல  நல்லவனா இருப்பான். ஒன்னு கருவுல இருக்கப்போ இன்னொன்னு காதல்ல இருக்கப்போ! 
காதலிக்கிறப்போ மற்ற உலக சுகங்கள் எதுலயும் அவனுக்கு ஈர்ப்பு இருக்காது. முழிச்சிகிட்டு இருக்க நேரம் முழுக்க அந்த பொண்ணையே நெனச்சிகிட்டு இருப்பான். தூங்க வேண்டிய நேரம் முழுக்க முழிச்சிகிட்டே இருப்பான்!

எப்பவும் தியான?! நிலைலயே  இருக்குறதுனால அவனை சுத்தி ஒரு ஒளி வட்டம் தெரிய ஆரம்பிச்சிடும். "நான் ஏன் பிறந்தேன்" னு மட்டும் தோணாது மத்தது எல்லாம் தோணும்.

மன்னனும் சாந்தியும் ஒரே டீச்சர் கிட்ட ட்யூஷன் படிச்சாங்க. மொத வேலையா சாந்தியோட சைக்கிள் எது... செருப்பு எதுன்னு தெரிஞ்சி வச்சிகிட்டான்!
ட்யுஷனுக்கு அவனோட ஓட்டை சைக்கிள்ள தான் போவான். சாந்தியும் சைக்கிள்ள தான் வரும். பெரும்பாலும் சாந்தி பின்னாடி தான் போவான். சாந்தி முன்னால போற மாம்பழம் வண்டி ஒதுங்குறதுக்கு பெல் அடிச்சா இவன் ஓரமா போய்கிட்டு இருக்க மாட்டு வண்டிக்கு அடிப்பான்.
சாந்தி ரோட்ல திரும்புறதுக்கு கைகாமிக்கிற அழக ரசிச்சிகிட்டே இவன் கைகாட்டாம திரும்புவான். பின்னால வரவன் இவன் குடும்பத்தையே வார்த்தைங்களால ஒரு உலுக்கு உலுக்குவான்!

சில நாள் சாந்தி சீக்கிரமே கிளம்பி போய்டும். முன்னால சாந்திய காணோம்னா பதறிடுவான்...புலிப்பாய்ச்சல்ல ட்யுஷன்க்கு போய்  வாசல்ல சாந்தியோட சைக்கிள் நின்னுகிட்டு இருக்கான்னு பாப்பான். இருந்ததுன்னா மனசுக்குள்ள ஒரு பாட்டு போட்டுவிட்டுட்டு மாடிப்படி ஏறி மேல போவன்..மாடில தான்  ட்யுஷன் நடக்கும். சைக்கிள் இல்லன்னா பாட்டு ஓடாது...அவன் மனசு தான் தாறுமாறா ஓடும்...ஒரு வேலை சாந்தி சைக்கிள் பஞ்சரா...இல்லை அதோட ஆயாவுக்கு எதுவும் உடம்பு முடியலையா...ஊர் திருவிழா கூட அடுத்த மாசம் தான...இப்படி என்ன என்னவோ தோணும்...ஆனாலும் ஒரு சின்ன நம்பிக்கையோட மேல போய் செருப்பு இருக்கான்னு பாப்பான். இப்போ அவன் உயிரு இருக்குறது அந்த செருப்பு இருக்குறத பொருத்தது.

பசங்களுக்கு பொதுவா பொண்ணுங்களோட கூந்தல் மேல ஆர்வம் இருக்காது...வெள்ளிகிழமையானா காலைல எட்டு மணிக்கு மொட்டைமாடிக்கு அந்த பொண்ணு தலை துவட்ட வரும்...னு தெரிஞ்சிக்கிறது தான் அதிகபட்சம்!

ஆனா இவன், ட்யுஷன்ல தலைய வலப்பக்கமா சாச்சி உக்கார்ந்துருக்க சாந்தியோட பின்னல் போட்ட முடி அது எழுதிகிட்டு இருக்க நோட்டு மேல பாம்பு மாதிரி ரெண்டு சுத்து சுத்தி படர்ந்து இருக்குறதையும்..எழுதுறத மறைக்கிதுன்னு சாந்தி அந்த முடிய இடப்புறமா தூக்கி போட்டா அது பக்கத்துல இருக்க பொண்ணோட இடது தோள்மேல பட்டு சரியிறதையும் குறிச்சி வச்சிக்கிறான். எதுக்குன்னு தெரியல. ட்யுஷன் முடியுது.

சாந்தியும் அதோட படிக்கிற இன்னும் ரெண்டு பொண்ணுங்களும் ஒண்ணா தெரு முனை வரைக்கும் பேசிக்கிட்டே வந்து பிரிஞ்சி போவாங்க.
அன்னைக்கி பேச்சு சமையல பத்தி.
சாந்தி சொல்லுது..குழம்பு கெட்டியா இருக்க ஏதோ மாவு கலக்கனும்னு எங்க பாட்டி சொன்னாங்க...என்ன மாவுன்னு மறந்துட்டேன்..
இன்னொரு பொண்ணு...எங்க அம்மா வெள்ளையா ஒரு மாவு கலப்பாங்க...அரிசி மாவுன்னு நெனைக்கிறேன்!.
வெள்ளையான்னா... ஒருவேளை கோலமாவா இருக்குமா?! மூணாவது பொண்ணு அதோட பாண்டித்யத்த காட்டுது!

பிரியிற இடம் வந்துடுச்சி. போயிட்டு வரேன்னு சொன்ன சாந்தி பின்னால வர மன்னனை பார்த்து முதல் முறையா சிரிக்கவும்....
அவன் மனசுக்குள்ள பட்டாம்பூச்சில இருந்து பருந்து வரைக்கும் பறக்குது!

வளரும்.
எண்ணமும் ஆக்கமும் அசோக்.மு


No comments:

Post a Comment